சொர்க்கமே என்றாலும் . . .

எனது தந்தை ஓய்வு பெற்ற தமிழாசிரியர். திடீரென்று ஏற்பட்ட உடல் நிலைக் கோளாறு காரணமாக ஒரு சிறிய அறுவை சிகிச்சை பண்ண வேண்டியிருந்ததால் சுமார் நான்கு வார காலம் எனது சொந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து அப்பாவை கவனித்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது பாக்கியமே.

யாருக்கும் எப்பொழுதும் கஷ்டம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிக உறுதியுடன் இருப்பார். இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். ஒரு நாள் காலையில் என் அம்மாவை அழைத்து " கொஞ்சம் என்னுடன் வருகிறாயா.? , சிறிது வேலை இருக்கிறது .." என்று அழைத்து சென்றவர் நேராக சென்ற இடம் நகரத்திலுள்ள ஒரு பெரிய ஆஸ்பத்திரியின் ஆபரேஷன் தியேட்டர் வாசலுக்கு, " கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து இரு . இதோ வந்து விடுகிறேன் ." என்று ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று விட்டார். அதன்பின் தான் அம்மாவுக்கே தெரியும் ஒரு வாரமாய் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று ஆபரேஷனுக்கு தேதியும் குறித்த பின்பு அழைத்து வந்திருக்கிறார். அப்படியொன்றும் அது சாதாரணமான ஆபரேஷன் இல்லை. உடலினுள் ஏற்பட்ட ஒரு சிறிய கட்டியை நீக்கும் அளவிற்கான ஆபரேஷன். பல மாதங்களுக்கு பின்பு தான் எனக்கெல்லாம் தெரிய வந்தது. என்னத்த சொல்ல . . ?

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு லெல்லாந் தலை .


****************************************************************************************

திருநெல்வேலி - நகரத்தின் உருவம் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. பெருகிவரும் வாகன இரைச்சல், புதிது புதிதாய் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரெண்ட்கள், கடைகள் நன்றாகத்தானிருக்கின்றன. அதே நேரம் அதன் பாரம்பரியத்தை நெல்லை இழந்துவிடவில்லை.
டவுன் - நெற்றி நெறைய விபூதி, அதிகாலை பஜனை, வற்றாத தாமிரபரணி, சுத்தமான தெருக்கள், நெல்லையப்பர், காந்திமதி அம்பாளின் தரிசனம், கோவில் வாசல், அருகிலேயே மணக்கும் இருட்டுக்கடை அல்வா, வார்த்தைகளில் பாசம் தெறிக்கும் மக்கள், சுண்டி இழுக்கும் ரொட்டி, சால்னா மணம். அப்பப்பா....
அப்படியே ஜங்ஷன், பாளையங்கோட்டை பக்கம் சென்றால் ருசியான பல உணவகங்கள், பாரம்பரியமிக்க தேவாலயங்கள், பூத்து குலுங்கும் மலர்களைப் போன்ற பள்ளி குழந்தைகள் இன்னும் இன்னும் திருநெல்வேலியின் சுவை கூடிக்கொண்டேயிருக்கிறது.
புறநகர் பகுதிகளில் ஏற்படும் சாதிச்சண்டைகளும், பழிவாங்குதல்களும் அடிக்கடி இரத்த சாயம் பூசிக்கொள்ளும் தனது இன்னொரு பழைய கோர முகத்தையும் இழந்தபாடில்லை நெல்லை.

*****************************************************************************************

தோழன் சாம், மற்றும் சார்லஸ் நேற்று இரவு பாளையங்கோட்டை , முருகன்குறிச்சி அருகில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்றார்கள். முட்டை மட்டும் இணைந்த சைவ உணவகம் . ஆஹா . . நம்ம ஆளுங்க கலக்குறாங்கப்பா . . வித விதமா டிஷ் ரெடி பண்றான். முட்டை சப்பாத்தி என்றொரு அயிட்டம். சப்பாத்திக்கு உள்ளே முட்டையை கொண்டுவந்து ஒரு தினுசா கொடுக்கிறான். சான்சே இல்லை.
அப்புறம் பல வெரைட்டியில தோசை, இட்லி அமிர்தமா சாம்பார், சட்னி. முட்டையின் மஞ்சள் கரு இல்லாம வொயிட் ஆம்லெட். அடடடா. . . ஒரு சின்ன குடிசைக்குள்ள நளபாகமே நடக்குது. திருநெல்வேலி பக்கம் வர்றவங்க தகவல் சொல்லிட்டு வாங்க. முட்டை சப்பாத்திக்கும், வொயிட் ஆம்லேட்டுக்கும் நான் கியாரண்டி.


******************************************************************************************

பரண்களில் இருந்து எடுத்த என் தந்தையின் பழைய டைரியிலிருந்து . . .


சிந்தனையாளர்கள்


மனிதனுக்குச் சொந்தமான சந்தோசங்களையும், துன்பங்களையும் அதை அனுபவிக்கும் மனிதர்களை விடவும், சிந்திப்பவர்களே அனுபவிக்கிறார்கள். அவற்றில் வலிந்து போய் சிக்கி ஆழ்ந்து அனுபவிக்கும் மனம் கலைஞர்கள் - சிந்தனையாளர்கள் பெற்ற வரம் அல்லது சாபம்.


பிரச்சினைகள்


இயற்கையின் விதிகளுக்கோ, விஞ்ஞானக் கணிப்புகளுக்கோ , ஒரு பெரும் புதிர் இருக்கும் எனின், அஃது எமது மனிதர் தம் அறியாமையே ஆகும்.
அறியாமைக்கு உரியவர்கள் பெரும்பாலும் ஏன் முழுமையாகவே நமது அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரியவர்களாகவே இருப்பதால்தான் பிரச்சினைகள் யாவும் வெடிக்கின்றன.
பிறந்த நாள் தொட்டு நான் பிறருக்கே ஒரு பிரச்சினையாக இருத்தல் குறித்து, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையான அவமானம் கொள்கிறேன்.
இந்தப் பிறவியில் எனக்கு கிட்டிய பேரருள் என்னவெனில் எனக்கு நான் என்றும் ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை என்பதே ஆகும்.


*******************************************************************************************



Read Users' Comments ( 7 )

பேனா முனையில் . . .


வலைப்பூ என்ற வார்த்தையையே எட்டு மாதங்களுக்கு முன்பு வரை தெரியாதவனாகத்தானிருந்தேன். இப்பொழுது வரை ஒரு . . . ம் எழுதி கிழித்துவிடவில்லை.

ஏதாவது எழுத வேண்டும் என்ற எனது கொடூரமான சுய விருப்பத்திற்காகவும், உருப்படியாக செய்ய வேறு வேலை எதுவும் இல்லாத காரணத்தினாலும் (இப்பொழுது வரை . . ) கிறுக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை எண்ணத்திலும் எழுத்திலும் ஒரு மன்னாங்கட்டியும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால் எழுத வேண்டும் என்ற பைத்தியகாரத்தனம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. (விதி . . )

கடந்த மூன்று மாதங்களில் எனது செயல்பாடுகள் குறைந்து காணப்பட்டாலும் இன்று வரை நான் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருப்பதற்கு முழுமையான முதற் காரணம் சக பதிவர்கள் மட்டுமே . . . பல சமயங்களில் லேசான பொறாமை கலந்த பிரமிப்புடன் இவர்களை வசிக்கும் அனுபவமே என்னை மேலும் மேலும் எழுதி இயங்க செய்து உங்களை மேலும் இம்சைபடுத்த வைக்கிறது.

நன்றி நண்பர்களே . . .

என்னதான் அடக்கி வாசித்தாலும் இதுவரை ஐம்பது பதிவுகள் நான் எழுதிவிட்டேன் என்பதே எனக்கு சற்று போதை தரும் விஷயம் தான்.
இந்த போதை தலைக்கு ஏறும் முன் சக பதிவர்களின் படைப்புகள் பக்கம் ஒரு ரவுண்ட் போய்விட்டு வந்தேன் என்றால் மொத்த போதையையும் இறக்கி தலையில் நாலு எழுமிச்சை பழத்தை தேய்ச்சி '' தம்பி , நீ இன்னும் வளரணும் தம்பி '' ன்னு சொல்லி வெறியேத்தி அனுப்பிடுவாங்க.

உடனே சிலிர்த்து கிளம்புற சிங்கம் ரெண்டே நாள்ல மறுபடியும் கூண்டுக்குள்ள போய் ஓய்வெடுக்க ஆரம்பிச்சிடும் வழக்கம் போல . ( நம்ம தொழிலே இதான . . )

ஆரம்பத்திலிருந்து எனக்கு எல்லா வகையிலும் ஆதரவளித்துவரும் கேபிள் அண்ணனுக்கும், தங்களது எழுத்துகளால் என்னை இயங்க வைத்துகொண்டிருக்கும் அண்ணன்மார்கள்., நர்சிம் , அப்துல்லா , பரிசில் , அதிஷா , செல்வேந்திரன் , ஆசிப் அண்ணாச்சி , ஆதிமூல கிருஷ்ணன் , யுவ கிருஷ்ணா மற்றும் உமா ஷக்தி , தவிர இன்ன பிற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி.

அண்ணன் சக்கரை சுரேஷ் க்கு என் அன்பு .

தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திவரும் வால்பையன் , நையாண்டி நைனா , macro , தம்பி ஷண்முக ராமன் , விக்னேஷ்வரி , தமிழச்சி , வெங்கி ராஜா , தத்து பித்து எல்லோருக்கும் என் அன்பு .

என் இம்சையை பொறுத்துக்கொண்டு என்னுடனே இருந்து என்னை ஊக்கப்படுத்தும் என் நண்பர்களுக்கும் , தம்பிகளுக்கும் என் அன்பு .


பழைய டைரி குறிப்புகள் .
( பழைய புத்தக சந்தையிலிருந்து . . . )




சில நேரம்
மானாய் துள்ளிப் போகும் !
மேகம் பொழிந்த
மழையாய் பொழியும் !
சிலபொழுது
நெருப்பாய் எரிக்கும் !
நரியாய் ஊளையிடும் .
காற்று கலைக்காத
மரமாய் மௌனிக்கும் .
இப்போது இப்படி
அப்போது அப்படி
என்று அளவிடமுடியாது !
இந்த மனசுகளே
இப்படித்தானோ . . . ?


*******************************************


கடமைக்கு குடும்பம் நடத்தி
கடனுக்கு வட்டி கட்டி
திரை முன்னால் கனவில் லயித்து
வரும் கஷ்டம் எல்லாம் சகித்து
எப்போதேனும் கொஞ்சம் சிரித்து
வெறுப்புதான் என்றாலும்
சமயங்களில்
ரசிக்கும்படியும் இருக்கின்றன
வாழ்தலின்
அவஸ்தைகள் . . . !



********************************************



கோயிலுக்கு போ என்றார்கள் .
சர்ச்சுக்கு போ என்றார்கள் .
மசூதிக்கு போ என்றார்கள் .
பார் - க்கு போ என்றார்கள் .
பீச் க்கு போ என்றார்கள் .
'' என்ன சார் ஆச்சு ..? ''
பரிவோடு கேட்டான் இஸ்திரி முருகன் .
மனக்கவலை சொன்னேன் .
மருந்து போல் ஒரு வார்த்தை சொன்னான் .
'' வீட்டுக்கு போ வாத்யாரே . . . '' .


**********************************************


Read Users' Comments ( 9 )

படித்து ரசித்தது . . .


நம் அறிமுக நாட்களில்....
மௌனங்களை பரிமாறிக் கொண்டோம்...
பின் கொஞ்சமாய் பார்வைகளும் புன்னகைகளும்...
பேச தொடங்கி... பின் நிறையப் பேசினோம்...
இதயம் வரை நீண்டது பரிமாற்றம்.

இந்நாட்களில் மீண்டும் துவங்கியிருக்கிறது...
மௌனங்களின் பரிமாற்றம்....
இம்முறை ஒவ்வொரு மௌனத்திற்கும்...
அர்த்தங்கள் கற்பிக்கிறது மனது...

கொஞ்சம் கொஞ்சமாய் பார்வைகள் தவிர்க்கப்படுகிறது...
பார்க்கும் பார்வைகளிலும் விடை தெரியா கேள்விகள்...
எந்த நிமிடமும் உதிர்ந்து விடும்...
ஒற்றை ரோஜாவின் கடைசி இதழாக...
நம்மிடையே மீதமிருக்கிறோம் நாம்...

நம்மை இணைத்திருந்த சிறகுகள்...
கனமாகிப் போனதாய் ஓர் எண்ணம்.
நேற்று வரை சுமந்த சிறகுகள்....
இன்று ஏனோ பூட்டப்பட்ட சங்கிலியாய்.

நம் சுயங்களின் சுமை தாங்காமல்...
நழுவி செல்கிறது முகமூடிகள்..
நம் உண்மை முகங்கள் பார்க்க பிடிக்காமல்..
பிரிவொன்றை எதிர்பார்த்து நாட்கள் கடத்துகிறோம்...

உனக்கும் இருக்ககூடும்...
சில காரணங்கள்..
உன்னிடமும் இருக்ககூடும்....
வலிகளை பட்டியலிடும் ஒரு கவிதை...
எனினும் அறிய விருப்பமின்றி விலகுகிறேன்...

ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உண்டு...
பிரிவின் நினைவாய் புன்னகை தந்துவிடாதே...
பின் உன் எல்லா புன்னகைகளும்...
பொய்யெனவே நினைக்க தோன்றும்.

நன்றி : சித்ரா தேவி.


Read Users' Comments ( 6 )