அழகிய தவறுகள் - 3



கடைசி கோப்பை மது.

ஒருநாள்
சிலபொழுது
உன்னுடன்...
வாழ்க்கையின் ஞாபகத்தில்
அழகான சில குறிப்புகள்......



*******************************************



அடர் மழை...
சீருந்தின் முன்னிருக்கை பயணம்,
சிதறி விழும் மழைத்துளிகளை
அழுத்தி துடைக்கும் வைபரின்
ஒவ்வொரு இயக்கத்திலும் தொடர்ந்து
விழுந்தபடியே இருக்கின்றன
பல நூறு திவலைகள்.
அவளின் நினைவுகள் போலவே...




*********************************************




வார்த்தைகள் தடித்த நேரத்தில்
நெருங்கிய நண்பனுடனான சண்டை.,
பழைய காதலை நினைந்து - பெருங்கூக்குரலில்
அசிங்கமானதொரு அழுகை.,
அறை முழுவதும் சிதறிக் கிடக்கும்
நேற்றைய வாந்தியின் எச்சங்களுக்கிடையில்
உள்ளாடை தெரிய உறங்கிக் கிடந்த ஒரு
அவமான அதிகாலை பொழுதில்
" இனி ஜென்மத்திற்கும் குடிக்கக் கூடாது" என
முடிவெடுத்த மூன்றாம் நாளிரவு,
நண்பன் ஆர்டர் செய்த பீரை வேண்டாமென்று சொல்ல
வார்த்தைகள் இல்லாமலே போனது।



***********************************************************



என்றோ ஓடிப்போன மனைவியை
எண்ணியபடி ஒரு பெருசும்,
ஒரு சுபமுகூர்த்த திருநாளில்
சங்கு ஊதப்பட்ட தன் காதலை நினைத்து
இன்னொருவனும்,
மனைவியை அடிப்பதற்காக ஒருவனும்,
அடிவாங்குவதற்காக மற்றொருவனும்,
வெற்றி பெற்ற காதல் களிப்பில் மேலும்
இரு இளைஞர்களுடனான இவ்விடத்தில்
பாட்டில்கள் சிணுங்கி, போதை வழிந்தோட...
ஒரே சுவற்றில் வரையப்பட்ட
பல கோட்டோவியங்களின் அர்த்தம்
புரிந்தும் புரியாமலும் மேலும் ஒரு குவார்டர்
ஆர்டர் செய்தேன்.




***********************************************



எனக்கான கோப்பை நிரம்பியே இருக்கிறது.
என் காதலைப் போலவே...

உன் உதட்டின் ரேகைகள் பதிந்த
என் முகத்தில் முள்காடுகள்.
என்றோ நீ கொடுத்த முதல் முத்தத்தின்
ஈரம் இன்றும் காயாமலே இருக்கின்றது.

எனக்கான கோப்பை நிரம்பியே இருக்கிறது.
என் காதலைப் போலவே...

ஒவ்வொரு துளியிலும் நீயே
இருப்பதை உணர்ந்து ரசித்து பருகுகிறேன்.
முன்னெப்பொழுதிலும் இல்லாத
காதல் உன்மீது.
இந்த கடைசிக் கோப்பை மது
அருந்தும் ஒவ்வொருமுறையும்....

எனக்கான கோப்பை நிரம்பியே இருக்கிறது.
என் காதலைப் போலவே...

***********************************************











2 comments:

சிசு said...

எல்லாமே நல்லாருக்கு வசந்த்.
குறிப்பாக, சீருந்துக் கவிதை... கவிதைப்படுத்தப்பட்ட ஒரு காட்சியாகவே தெரிகிறது.

எல்லாமே அனுபவக் கவிதைகள் என்றால், ஒரு வேண்டுகோள் நண்பா...

கையிலிருப்பதே கடைசிக் கோப்பையாக இருக்கட்டும்.

shanmuga raman said...

அண்ணாச்சி... சரக்கு அடிக்க காசு வேணுமா .............